Search This Blog

Saturday, March 2, 2013

பூரண மதுவிலக்கும் சில சிந்தனைகளும்

தடுக்கிவிழுந்தால் தென்படும் டாஸ்மாக் சூழ்நிலையில், குடிப்பவர்கள் செய்யும் அட்டகாசங்களை நாம் அனைவருமே கடந்து வந்திருப்போம். சமீபத்தில் நான் கண்ட சம்பவம் இது. 
மிக நெரிசல்மிகுந்த இரயிலில் ஏறினேன். இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க நபர் குடித்துவிட்டு, சண்டை போட்டுக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நிறுத்தத்திலும் இறங்குவதுபோல் பாசாங்கு செய்து, பின் இரயில் புறப்பட்டதும் இரயில் சக்கரத்தில் நுழைய முற்பட்டு, சுற்றியிருந்தவர்கள் காப்பாற்றினர். இது ஒவ்வொரு நிறுத்தத்திலும் நடந்தது. அவர்கள் திட்டினால் பதிலுக்கு அவரும் திட்ட, மிக வேடிக்கையாக இருந்தது.
முடிவாக அவர் நிறுத்தத்தில் இறங்கி, இரயில் கிளம்பும்வரை காத்திருந்தார். இரயில் நகர ஆரம்பித்ததும், ட்ராக்கில் இருந்த ஜல்லிக் கல் ஒன்றை உள்ளே தன்னை காப்பாற்றி திட்டியவர்மேல் வீசினார். யாருமே இதை எதிர்பார்க்கவில்லை. அடிபட்டவர் வாய் கிழிந்து, இரண்டு பல் உடைந்து, தரையெல்லாம் இரத்தம். 
இதற்கு காரணம் அவர் குடித்திருந்தார் என்பது மட்டுமே நிச்சயம் இருக்க முடியாது. அவர் இதை முழுவதுமாக தன்னிலை மறந்தும் செய்யவில்லை. குடி அவருக்கு கூடுதல் தைரியத்தை தந்திருக்கலாம். 

குடியால் சீரழிந்த எத்தனையோ குடும்பங்களை பார்த்திருக்கிறேன். குடிக்க மட்டுமே மொத்த சம்பளத்தையும் செலவழித்து, பிள்ளைகளின் படிப்பை நிறுத்தி, தனது கல்லீரல் பாதிக்கப்பட்டு, இளவயதிலேயே இறந்து, குடும்பம் நடுத்தெருவுக்கு வந்த நிலையும் உண்டு.

பள்ளி, கல்லூரிகளில் ஏன் பணிபுரியும் இடத்திலும் ட்ரீட், பார்ட்டி என ஆரம்பித்து, பின் தினசரி பல்தேய்ப்பது, குளிப்பது போல் மது அருந்தும் பழக்கமுடைய குடிகாரர்களும் இன்னொரு வகை.
சரி, குடிப்பது தவறா? என் பதில் 'ஆம்', 'இல்லை' இரண்டுமே.

'இல்லை'- ஏனென்றால் மது பழக்கம் புகை மற்றும் போதை வஸ்துக்கள் அளவுக்கு மோசமில்லை(ஒப்பீட்டளவில் மட்டும்). பண்டைய காலத்திலிருந்தே மனித இனத்தில்(சமயத்தில் யானைகளும் போதைதரும் பழங்களை தெரிந்தே உண்ணுமாம்) இருந்துவரும் பழக்கம், 'உற்சாக' பானம் என்ற பெயரில். ஆம், பெயருக்கேற்றாற்போல் உற்சாகத்தை கொடுக்க வல்லது.
 

 குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கு அல்லது பிடிக்காதவர்களுக்கு நான் சொல்வது அசூயை ஏற்படுத்தலாம். ஆனால் உண்மை இதுதான்: மது ஒரு மகிழ்ச்சி பானம், யாரையும் புண்படுத்தாமல், தெருவில் உளறியபடி சுற்றாமல், பழகிய நண்பர்களுடனோ, தனிமையிலோ அருந்தும்போது(அளவாக), அது அவரவர் தனி மனித சுதந்திரம்.
 
 
ஏன் குடிப்பழக்கம் தவறு என்பேனெனில், பெரும்பாலனோருக்கு தனது குடிக்கும் வரைமுறை தெரிவதேயில்லை. முன்சொன்னதுபோல், அளவுக்குமீறி குடித்து, உடலையும், குடும்பத்தையும், பொருளாதாரத்தையும் வருத்திக் கொள்கிறார்கள். இவர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகவே இருப்பார்கள்.
கண்டிப்பாக, இவர்கள் குடியை விட்டொழித்தோ, குறைந்தபட்சம் அளவாக குடிக்கும் நிலைக்கோ வர வேண்டும். 

டாஸ்மாக்கை கழுவி ஊத்துபவர்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். அரசின் லாபத்திற்காக அல்ல, கள்ளச்சாராயம் அருந்தி பாமர மக்கள் உயிர்விட்ட சம்பவங்களால் உருவாக்கப்பட்ட திட்டம் இது.  சகாய விலையில் கிடைக்கும் பட்சத்தில், விஷ சாராயத்தை நாட மாட்டார்கள் என்ற நல்லெண்ணம். டாஸ்மாக்கை மூடுவதன்மூலம் அதே பழைய நிலை திரும்பவும் வாய்ப்புள்ளது.ப்ளாக்கில் தரமற்ற மது விற்பனை செய்யும் அபாயமும் உண்டு.

ஆகையால் மதுவிலக்கு இன்னமும் பிரச்சனையை விரிவு படுத்துமன்றி தீர்வாகாது. சரி, குடித்தாலும் தவறு, குடிக்காமல் இருப்பதும் முடியாத காரியம், என்னதான் செய்யலாம் என்கிறீர்களா? 'விலை உயர்வு' ஒரு வழி. ஆனால் இது எல்லா மாநிலங்களும் ஒருசேர முடிவெடுக்கிமுபோது, நல்ல பலனை தரும். மாற்று வழியாக மதுவின் சேர்க்கை குறைந்தளவில் உள்ள சரக்கை மட்டும் விற்கலாம்(ப்ரீஸர் என்பார்கள்-4% alcohol என மருத்துவ நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டேன்). இதன்மூலம், அவர்கள் உடலில் சேரும் alcohol அளவு கம்மியாகும். அதையும் மீறி போதை வேண்டுமானால், அதிகம் முறை சுச்சூ போகவேண்டிய கடுப்பிலேயே, குடிக்கும் அளவு குறைந்துவிடும்.
 
 

யோசித்தால் இதைவிட இன்னும் நல்லமாற்று கூட கிடைக்கலாம். மதுவிலக்கை ஆதரிக்கும் அரசியல்வாதிகளுக்கும் இந்த ஓட்டைகள் தெரியும். அவர்களது இலக்கு வாக்குவங்கி, குடிகாரர்களைவிட அவர்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஏராளம் என்ற கணக்கில் இவர்கள் செய்யும் போங்காட்டம். 
 
 
நீரிழிவுக்கோ, இரத்தக்கொதிப்புக்கோ எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் கம்பெனி திவாலானாலும், உயிர் காக்கும் மருந்து எனும் காரணத்தால், அதே compositonல் வேறு மாத்திரை வரும்வரை, உற்பத்தி செய்வார்கள். அதுபோன்ற அணுகுமுறைதான் இங்கும் தேவைப்படுகிறது. கண்ணைமூடிக்கொண்டு மதுவிலக்கை ஆதரிக்கும் முன் சிறிது யோசித்தல் நலம். 

Sunday, February 3, 2013

'டேவிட்' பற்றி ஒரு பதிவு

மணிரத்னத்தின் சிஷ்யர் பிஜோய் நம்பியார் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்போடு சென்று பார்த்தேன், பொய்க்கவில்லை. மிக மாறுபட்ட genreவில் Goa கலாசாரத்தை முதன்முறையாக தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். ுழு நேர குடிகாரராக விக்ரம், 'மரிய பிதாஷே' பாடலில் கலக்கலாக அறிமுகமாகிறார். விக்ரம் வரும் பகுதி முழுவதும் டப்பிங் என்றாலும் நான் மிகவும் இரசித்து பார்த்த பகுதி அதுதான்.


இருவேறு டேவிட்களின், இருவேறு காலகட்டங்களில் நடந்த சம்பவங்களை தொய்வில்லாத திரைக்கதையில் நிதானமாக பயணிக்கிறது கதை.
பிளாக் ஹ்யூமருக்கு, தமிழில் 'டேவிட்' சிறந்த படமாக அமையும். அனிருத்தின் இசை பின்னணியிலும், பாடல்களிலும் 'செம'.
 

 


அக்காவும், தம்பியுமாக(ஜீவா) ஒன்றாக 'தம்' அடிப்பது, மசாஜ் பார்லர் நடத்தும் தபுவுக்கும், விக்ரமுக்குமான நட்பு என மிக அழகாக உறவுமுறைகளின் புதிய பரிமாணம் தமிழுக்கு ரொம்ப புதுசு. 
காது கேளாத, வாய் பேச முடியாத பெண்ணாக வரும் இஷா ஷெர்வானி கண்களாலே பேசி மனதை கொள்ளை கொள்கிறார். ஜீவாவின் தந்தையாக நாசர்,'மன்னிப்பே அன்பின் வழி' என நிறைவாக நிறைவு செய்கிறார்.
 
 
கதையை தேடி சென்றால் ஏமாற்றமே மிஞ்சும். நதி போல் செல்லும் கதையில் எப்பொழுதும்போல் நாலு பாட்டு, பன்ச் வசனம் எதிர்பார்க்காமல் சென்றால், 'டேவிட்' ஒரு சிறந்த அனுபவம்.